ராமதாஸ் காரை நிறுத்தி சோதனை: பாமகவினர் போராட்டம்
பென்னாகரம் அருகே தின்னப்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்ற ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தன்னை யார் என்று அடையாளப்படுத்தினார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.
இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவருடன் மற்ற கார்களில் வந்த தொண்டர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் இருந்த நூற்றுக்கணக்கான பாமகவினரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி சுதாகர், நடந்த நிகழ்ச்சிக்காக ராமதாசிடம் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது மறியலை ராமதாஸ் கைவிட்டார்.
இது குறி்த்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளரான எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில்,
பிரசாரத்துக்கு வந்த எங்கள் தலைவரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. ஆனால், திமுக முக்கிய நிர்வாகிகள் சென்ற கார்களை போலீசார் எநத சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. ராமதாசின் காரை சோதனை செய்து பாமகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்தனர் என்றார்.
நாங்க ஆரம்பிச்சா..திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை:
இந் நிலையில் பென்னாகரத்தில் திமுக-பாமகவினர் இடையே ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த இரு பாமகவினர் பென்னாகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,
வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் வேஷ்டி, சேலை, பணம் கொடுத்து வருகின்றனர். கெட்டூரில் திமுகவினர் பணம் கொடுக்க முயற்சித்த போது எங்களது கட்சியினர் அதை தட்டிக் கேட்டனர். அப்போது உருட்டுக்கட்டை, அரிவாளுடன் வந்த அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பாமகவினரை தாக்கினர்.
போலீஸாரும், தேர்தல் அதிகாரிகளும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பதிலுக்கு நாங்களும் ஆரம்பிச்சா இந்த நாடும் தாங்காது; தொகுதியும் தாங்காது.
தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். தோல்வி பயத்தால் கோழைத்தனமாக பணம், பொருள் கொடுத்து ஓட்டு கேட்டு வருகின்றனர். முடிந்தால் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டியது தானே. எதற்காக இப்படியொரு வெற்றியை பெற வேண்டும்.
திமுகவினர் வேஷ்டி, சேலை, பணம் கொடுப்பது குறித்து புகார் தெரிவித்தால் போலீஸார் எங்கள் கட்சியினர் மீதே வழக்குப்போடுகின்றனர். கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவம் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஆளும் கட்சியினர் இந்த போக்கை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறுபடியும் சொல்கிறேன், நாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்கமாட்டீங்க என்றார்.