நைஜீரியாவில் பெரும் மதக் கலவரம்- 300 பேர் பலி
அபுஜா: நைஜீரியாவில் ஏற்பட்ட பெரும் மதக் கலவரத்திற்கு 300 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மதக் கலவரத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கலவரம் வெடிப்பதும், பல நூறு பேர் கொல்லப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த வாரம் பிளாட்டு மாநிலத்தில் உள்ள ஜோஸ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடுமையான மத கலவரம் மூண்டது.
இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர். பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர்.
இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டோகோ நஹவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் தாக்கப்பட்டு பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ளனர்.
கலவரம் பெரிதாகி வருவதைத் தொடர்ந்து அதை அடக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமையக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருவதாக தற்காலிக அதிபர் குட்லக் ஜொனதான் கூறியுள்ளார். அதிபர் உமரு யார்துவா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் குட்லக் ஜொனதான் அதிபர் பதவியைக் கவனித்து வருகிறார்.