முஸ்லீம் ஓட்டுக்களை குறி வைத்து மசோதாவை புறக்கணித்த மம்தா
அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் மம்தா. இம் மாநிலத்தில் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதாவை ஆதரித்த மம்தா அதில் முஸ்லீமகளுக்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. இதையடுத்தே, தங்களிடம் உரிய முறையில் விவாதிக்காமல் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றுவதாகக் கூறி நேற்று அதன் மீது நடந்த ஓட்டெடுப்பை புறக்கணித்துள்ளார் மம்தா.
ஆனால், அதற்கு வேறு காரணத்தைக் கூறியுள்ளார் மம்தா. நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கூட்டணி கட்சி எங்களது திரிணாமுல் காங்கிரஸ். எனவே மத்திய அரசு எங்களுடன் மசோதா குறித்து ஆலோசனை நடத்தி எங்களுடைய நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், எங்கள் நம்பிக்கையை பெற எந்த முயற்சியையும் காங்கிரஸ் பெறவில்லை.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இடதுசாரி கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்து விட்டது. மசோதாவை நிறைவேற்றும் முன் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ஆனால் இடதுசாரிகளின் ஆதரவு இருந்ததால் அதை ராஜ்யசபாவில் அவசர அவசரமாக விவாதம் நடத்தி நிறைவேற்றி விட்டார்கள் என்றார் மம்தா.
ராஜ்யசபாவில் 2 எம்பிக்கள் கொண்டுள்ள மம்தாவின் கட்சிக்கு மக்களவையில் 19 எம்பிக்கள் உள்ளனர்.
இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 2வது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தான். 18 எம்பிக்கள் கொண்ட திமுக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
தவறி விழுந்த பிருந்தா காரத்:
இந் நிலையில் பெண்கள் மசோதா நிறைவேறியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் பிருந்தா காரத் ராஜ்யசபாவில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அவரை நோக்கி பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிருந்தா காரத் படிக்கட்டில் தவறி விழுந்தார்.