பென்னாகரம்- வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது
தர்மபுரி: பெண்ணாகரம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 3ம் தேதி தொடங்கியது.
திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதுவரை 17 சுயேச்சைகள் உள்பட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்றுடன் மனு தாக்கல் முடிவுக்கு வந்துவிட்டது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். மனுக்களை வாபஸ் பெற 13ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்தத் தொகுதியில் திமுக, பாமக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இடைத் தேர்தல் நடக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டதால் அதிமுகவினரிடையே வேகம் இல்லை. அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தெரிகிறது. அதன் பின்னர் அதிமுக தரப்பு சுறுசுறுப்பாக வாய்ப்புள்ளது.
தேமுதிகவைப் பொறுத்தவரை கடந்த இடைத் தேர்தல்களில் டெபாசிட்டே போய்விட்டதால், இம்முறையும் அப்படி நடந்துவிடாமல் இருக்க கடுமையான பிரயத்தனம் செய்து கொண்டுள்ளனர்.