அல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கை
அமெரிக்காவின் ஓக்லாஹோமா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது சிஐஏ இயக்குனர் லியான் பனேட்டா இத்தகவலை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், 'ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நிர்பந்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பலரும் தங்களின் கூடாரங்களை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தலைவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.
அமெரிக்க முயற்சிகள் அல்-கொய்தாவின் தலைமையிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. சிஐஏவின் உதவியுடன் தாலிபான் தீவிரவாத முன்னணி தலைவர்கள் பலர் சிக்கியுள்ளனர்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட அல்-கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள அல்-கொய்தா தலைவர்கள் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கிடையே, இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளும் அல்-கொய்தா மூலமாக புதிய ஆபத்துகளை சந்திக்கப்போவதாக தெரிகிறது' என்றார்.