நெல்லை ரயில் திட்டங்கள் - காற்றோடு போன ரயில்வே அமைச்சரின் அறிவிப்புகள்
நெல்லை: லாலு பிரசாத் காலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மமதா பானர்ஜி காலத்தில் காற்றோடு காற்றாய் கலந்து கரைந்து போய் விட்டதால், தென் மாவட்ட மக்கள் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.
காட்சிகள் மாறி ஆட்சிகளும் மாறும்போது அவர்களால் அறிவிக்கப்படும் திட்டங்களும் அவர்களோடு போய்விடும் விந்தை தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 2008-09 இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதில் தமிழகத்துக்கு 5 புதிய ரயில்களும், ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவால் தொடங்கி வைக்கப்பட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்களும் இயக்கப்படும் என்றும், செங்கோட்டையில் இருந்து ஈரோடு பயணிகள் ரயில், நெல்லை-பிலாஸ்பூர் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளையும் அறிவித்தார்கள்.
ஆனால் தேர்தல் வந்ததால் தேர்தல் முடிந்த பின் அந்த ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தல் முடிந்து மீண்டும் மத்தியில் அதே ஆட்சி அமைந்தது.
ஆனால் திட்டங்களை அறிவித்த லாலுவும், இணை அமைச்சராக இருந்த வேலுவும் அப்பதவிகளிலிருந்து போய் விட்டனர். மாறாக மம்தா பானர்ஜி அமைச்சராக பொறுப்பேற்றார். அவரும் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால் லாலு பிரசாத் திட்டங்களை மொத்தமாக புறக்கணித்தார்.
குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி, ஆன்மீகம், சுற்றுலா தலம், போன்றவைகள் அமைய பெற்ற தென்காசி-திருச்செந்தூர் வாரம் 5 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவி்க்கப்பட்ட ரயில் சேவை, ஈரோடு-செங்கோட்டை தினசரி பயணிகள் ரயில் ஆகிய திட்டங்கள் ஆகும்.
சமூக இன போராளி ஈரோடு சிங்கம் ஈ.வே.ரா பிறந்த மண்ணிலிருந்து ஆஷ்துரை எனும் ஆங்கிலேயே ஆட்சி தலைவரை சுட்டு கொன்ற வீரவாஞ்சி பிறந்த மண்ணுக்கு செல்லும் ரயிலை இயக்க வைக்க எந்த திராவிட, தேசிய கட்சிகளும், முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்டங்களில் இருந்து டெல்லி சென்ற விருதுநகர் எம்பி மாணி்க் தாகூர், தென்காசி எம்பி லிங்கம், நெல்லை எம்பி ராமசுப்பு, திருச்செந்தூர் எம்பி ஜெயதுரை, கன்னியாகுமரி எம்பி உள்ளிட்ட யாரும் தென் மாவட்டங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்கான ரயில் சேவை அதிகரிப்பு குறித்து எதுவும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு குரல் பரவலாக தொகுதியில் உலாவி வருகிறது.
இன்று, நெல்லையில் தொடங்கவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு வரும் ரயில்வே துறை இணை அமைச்சர் அகமதுவை தென்மாவட்ட வர்த்தகர்கள் தங்கள் பகுதி சங்க பிரமுகர்களோடு சென்று சந்தித்து இதுகுறித்து பேச உள்ளனர்.
தென்னக ரயில்வேயில் தென்மாவட்டங்கள் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் வடமாநிலங்கள், மாவட்டங்களில் தொழில் புரியும் வர்த்தகர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை தேடும் பட்டதாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருவது நிதர்சனமான உண்மை.