பணம் பறிக்க கல்லறையில் இருந்து திருடப்பட்ட சைப்ரஸ் மாஜி அதிபரின் சடலம்!
பிணத்தைத் திருடியவர்கள், பணம் பறிக்கும் நோக்கில் அதை தோண்டி எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
சைப்ரஸ் நாட்டில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய கிரேக்க சமூகத் தலைவர் டாசோஸ் பபடோபோலஸ்.
சைப்ரஸின் அதிபராக கடந்த 2003 முதல் 2008ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2008 டிசம்பரில் இறந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் இவரின் நினைவு தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்ய இருந்த நிலையில் கல்லறையில் டாசோஸின் சடலத்தை காணவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லறையில் இருந்து திருடப்பட்ட முன்னாள் அதிபரின் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில் உள்ள மற்றொரு கல்லறையில் டாசோசின் சடலம் கடந்த திங்கள் கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மர்ம ஆசாமிகள் சிலர் டாசோசின் சடலத்தை கடத்தி, டாசோஸ் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த தகவலை டாசோஸ் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இருப்பினும் சைப்ரஸ் சட்டஅமைச்சர் லாக்கோஸ் லூக்கா கூறுகையில், இந்த கடத்தல் விவகாரம் உண்மை தான் கூறியுள்ளார்.
தொலைபேசி மூலமாக கடத்தல் ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார். சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், கடத்தல் ஆசாமிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.