நள்ளிரவில் சாப்ட்வேர் என்ஜியர்கள் காரில் கடத்தல்- மர்ம கும்பலுக்கு வலை
சென்னை: நள்ளிரவில் கம்ப்யூட்டர் என்ஜினியர்களை காரில் கடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து விட்டு சென்னை அடையாறு டீச்சர்ஸ் காலனியில் கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கி நடத்தி வருபவர்கள் சதாசிவம், பூபதி, நந்தகோபால்.
கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு சதாசிவம், பூபதி, நந்தகோபால் ஆகியோர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டரில் படம் பார்த்தனர். படம் பார்த்துவிட்டு 3 பேரும் தங்களுடைய காரில் புறப்பட்டனர்.
காரை எடுக்கும் போது அருகில் நின்றிருந்த இன்னொரு கார் மீது இவர்களுடைய கார் மோதிவிட்டது. இதையொட்டி அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
பின்னர் சதாசிவம், பூபதி, நந்தகோபால் ஆகியோர் தங்களுடைய காரில் புறப்பட்டு போய்விட்டனர். அடையாறு இந்திராநகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக காத்திருந்தனர்.
அப்போது மாருதி கார் ஒன்றில் 4 பேர் பயங்கர ஆயுதங்களோடு வந்தனர். அவர்கள், சதாசிவத்தை அவரது இடது கை தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
பின்னர் அந்த கும்பல் பூபதியையும், நந்தகோபாலையும் அவர்கள் வந்த காரிலேயே கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர்.
சதாசிவம் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கடத்தப்பட்ட பூபதி, நந்தகோபால் ஆகியோர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.
பூபதி, நந்தகோபால் ஆகியோரின் செல்போனை கண்காணித்தபோது, நேற்று காலையில் அவர்கள் புதுச்சேரியில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் செல்போனில் அவர்களோடு பேச முடியவில்லை.
இதற்கிடையில், அவர்களை மீட்க சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்றனர். புதுச்சேரியில் அவர்களை பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் பூபதி, நந்தகோபால் ஆகிய இருவரையும் கடத்தல் கும்பல் மதுராந்தகத்தில் அவர்களுடைய காரோடு விட்டுவிட்டு போய்விட்டதாக தெரிய வந்தது.
அவர்களுடைய செல்போன்களையும், அவர்கள் வைத்திருந்த ரொக்கப்பணத்தையும் கடத்தல் கும்பல் பறித்து சென்றுவிட்டனர்.
அவர்களை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டு சென்னை அழைத்து வந்தனர். கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.