ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பஞ்சாயத்துத் தலைவர் திடீர் உண்ணாவிரதம்
ஸ்ரீவைகுண்டம்:கருங்குளம் யூனியன் முத்தலாங்குறிச்சியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்துத் தலைவர் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்களம் பஞ்சாயத்து யூனியனில் முத்தலாங்குறிச்சி பஞ்சாயத்தில் மகளிர் சுகாதார வாளகத்திற்கும், அங்கன்வாடி பள்ளிக்கும் இடையே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கிராம தலையாரி நல்லதம்பி ஆக்கிரமித்து முள் உடை மரங்களை வளர்த்துள்ளார்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் விளையாட்டு திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்தபோதுதான் பஞ்சாயத்துத் தலைவர் கந்தசாமிக்கு இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த மனுநீதி நாளில் கந்தசாமி கொடுத்த மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை பஞ்சாயத்து மீட்டு தர கோரியும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கந்தசாமி நேற்று உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருடன் விட்டிலாபுரம் கோவில்பத்து பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பால்ராஜ், முத்தலாபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தங்கபாண்டியன், ஊர்த்தலைவர் லட்சுமணன் ஆகியோர் இருந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அடர்த்தியாக முட்புதர்கள் உள்ளதால் அருகில் உள்ள மகளிர் சுகாதார வாளகத்திற்குள்ளும், அங்கன்வாடிக்குள்ளும் பாம்புகள் படையெடுப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திடீர் உண்ணாவிரதம் தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.