டாஸ்மாக் பணியாளர்கள் 17ம் தேதி கடையடைப்புப் போராட்டம்
நெல்லை: பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் மார்ச் 17ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6720 டாஸ்மக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் மேற்பார்வையாளர்கள் என 31 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டு 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், கல்வி தகுதிக்கு ஏற்ப பிற துறைகளில் பதவி உயர்வு, அரசு துறை காலியிடங்களில் மதுக்கடை ஊழியர்களை நியமனம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கதவடைப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அம்பையில் டாஸ்மாக் கடை மூடல்
இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து மேலாளர் மற்றும் அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அம்பை சந்தை பகுதி டாஸ்மாக் கடையுடன் கூடிய பாரில் ரூ.60 மதிப்புள்ள குவாட்டர் மதுபானத்தை ரூ.80க்கு விற்றனர். இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பார் உரிமையாளர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அம்பை சந்தை பகுதி டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் அம்பை போலீசில் புகார் செய்தனர். அதில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதை தடுத்த எங்களை அடியாட்கள் வைத்து தாக்குவேன் என பார் உரிமையாளர் மிரட்டியதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே கடை ஊழியர்கள் தன்னை மிரட்டுவதாக பார் உரிமையாளரும் போலீசில் புகார் செய்துள்ளார். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தால்தான் கடையை திறப்போம் என டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.