பென்னாகரம்: 33 வேட்ப மனுக்கள் ஏற்பு - நாளை மாலை இறுதிப் பட்டியல்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் தாக்கலாகியிருந்த 37 வேட்பு மனுக்களில் நான்கு மட்டும் நிராகரிக்கப்பட்டன. மற்ற 33 மனுக்களும் ஏற்கப்பட்டன.
போட்டியிலிருந்து விலக விரும்புவோர் நாளை மாலைக்குள் வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கப்படும்.
இன்பசேகரன் (திமுக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), தமிழ்குமரன் (பாமக), காவேரிவர்மன் (தேமுதிக) உள்பட 37 பேர் பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நேற்று தேர்தல் அதிகாரி மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சய்போஸ்ரெட்டி, அஹுஜா, துணை கலெக்டர் (பயிற்சி) பிரியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனை இறுதியில், தி.மு.க. மாற்று வேட்பாளர் ஜானகி, அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் வேலுமணி, பா.ம.க. மாற்று வேட்பாளர் சாந்தா ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல சுயேச்சை வேட்பாளர் மனிதன் டெபாசிட் செலுத்தாததாலும், சொத்து கணக்கு தாக்கல் செய்யாததாலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மீதமிருந்த 33 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.