பென்னாகரம்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து 2 நாள் சிபிஎம் பிரசாரம்
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து 2 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வரும் 20ம் தேதி பாலபாரதி எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ, 24ம் தேதி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
மாற்றுத் திறனுடையோருக்கு என தனியான அமைச்சரகம், பொது அடையாள அட்டை உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது என்ற முதல்வரின் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் உள்ள வேளாண்மை ஆய்வு மையத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.2 கோடி நிதியை கொண்டு, திருப்பதி சாரத்தில் அமைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு இந்த இடமாற்ற முடிவை கைவிட்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளை பேச்சிப்பாறை ஆய்வு மையத்திலேயே செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.