விலைவாசியை கட்டுப்படுத்தாவிட்டால் 'ஒத்துழையாமை இயக்கம்' - இடதுசாரிகள் எச்சரிக்கை!
டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தொண்டர்கள் செங்கொடிகளுடன் திரளாக பங்கேற்றதால், டெல்லி நகரம் செம்மயமாகிப் போனது.
அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கியபடி, ராமலீலா மைதானத்தில் இருந்து ஜந்தர்மந்தர் வரை தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறினால், வருகிற ஏப்ரல் 8ம் தேதி அன்று ஒத்துழையாமை இயக்க' போராட்டம் நடைபெறும் என்று பேரணியில் பங்கேற்ற தலைவர்கள் எச்சரித்தனர்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இதுவரை நடைபெறாத மிகப் பெரிய போராட்டமாக இது அமையும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி அன்று, பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை பதவியில் இருந்து அகற்றுவோம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் எச்சரிக்கை விடுத்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை கண்டித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், ஏழை-பணக்காரர்களுக்கு இடையே இருந்துவந்த இடைவெளி மேலும் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
மத்திய பட்ஜெட்டை விமர்சித்த மற்றொரு முக்கிய தலைவரும் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க பொதுச் செயலாளருமான குருதாஸ் தாஸ்குப்தா, தற்போதைய அரசு, பணக்காரர்களின் அரசு என்று குறிப்பிட்டார்.
வசதி படைத்தவர்களுக்கு ஏறத்தாழ ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு வருமான வரி தள்ளுபடி அளித்து இருப்பதாகவும், ஏழை விவசாயிகள் பயன்படுத்தும் உரத்துக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.4 ஆயிரம் கோடி மானியம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மன்மோகன்சிங், முதலாளித்துவவாதிகளின் தரகராக மாறி விட்டதாக குற்றம் சாட்டிய ஏ.பி.பரதன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறாவிட்டால், நிதிமசோதா நிறைவேற்றப்படும்போது வெட்டு தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் எச்சரித்தார்.