இந்தியாவுக்காக பாகிஸ்தானுடன் ஒத்துழைக்காமல் உள்ளோம்: விளாடிமிர் புடின்
டெல்லி: இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவொரு ராணுவ ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்துள்ள ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து தீவிரவாத ஊடுருவல் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் விளாடிமிர் புடின் நிருபர்களிடம் பேசுகையில், 'பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்களால் உலக நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், உண்மையில் பாகிஸ்தானின் நன்மைக்குத் தான்.
மற்ற நாடுகளைப் போல, பாகிஸ்தானுடன் ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் ஈடுபடவில்லை.
இந்தியாவின் நலன் குறித்து ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. எனவே இந்திய நலனை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவிதமான ராணுவ ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை' என்றார்.