குரும்பூர் - விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்ததால் பதட்டம்
குரும்பூர்: குரும்பூரில் விநாயகர் சிலையை மீண்டும் அகற்ற முயற்சி நடந்ததால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் அருகில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலை சுற்று வட்டார மக்கள் வழிபட்டு வந்தனர். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோயில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினர் போர்கொடி தூக்கினர்.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் சிலையை அரசு அகற்ற முயன்றது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை அகற்றும் முயற்சி கிடப்பில் போடப்பட்டது.
இதை தொடர்ந்து திறந்த வெளியில் இருந்த விநாயகர் கோவிலுக்கு கட்டிடம் கட்ட நிர்வாக குழுவினர் முடிவு செய்து கடந்த 6 மாதங்களுக்கு முன் பணி தொடங்கினர். இதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதிக்கவில்லை. கோவிலில் தினமும் இரு வேலை பூஜை நடந்து வந்தது.
கடந்த 6 மாதமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வழிபாடுகள் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது.
இதற்கிடையே நேற்று ரயில்வே போலீசார் விநாயகர் சிலையை அகற்ற முடிவு செய்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி குரும்பூர் போலீசாரிடம் கேட்டனர்.
இந்த தகவல் கோவில் நிர்வாக குழு மற்றும் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று காலை மாநில இந்து முன்னணி மாநில துணை தலைவர் விபி ஜெயக்குமார், குரும்பூர் நாடார் வர்த்த்க மகமை சங்க செயலாளர் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் குரும்பூர் ரயில்வே விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.