விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகள் 'ஜப்தி'!
விழுப்புரம்: செஞ்சி பஸ் நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
செஞ்சி அருகில் உள்ள நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 2003ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்
இவரது மரணத்துக்கு நஷ்டஈடு கோரி செஞ்சி சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடிவில் ரூ 9.20 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு செஞ்சி சார்பு நீதிமன்ற நடுவர் உத்திரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து போக்குவரத்து கழகத்தினர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் நீதிமன்றம் போக்குவரத்து அதிகாரிகளின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.
ஆனாலும், அரசு போக்கு வரத்து கழகம் நஷ்டஈடு வழங்காமல் காலதாமதம் செய்தது. இது தொடர்பாக நிறைவேற்று மனு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் நஷ்டஈடு வழங்காத அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, செஞ்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
தமிழக தலைமைச் செயலகம் திறப்பு விழா காணும் நேரத்தில் தமிழக அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.