சேலம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தூக்கு!
சேலம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி போலீஸ் சரகம் புளியம்பட்டி கிராமம் செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், இந்திராணி தம்பதி.
இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களது குழந்தைகள் பழனியம்மாள், மணிகண்டன். சிறுமி பழனியம்மாள் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2009 பிப்ரவரி மாதம் சிறுமி பழனியம்மாளின் பெற்றோர் பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர். அதனால் பழனியம்மாளை அருகில் உள்ள தாத்தாவின் வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். அங்கிருந்தபடியே அவள் பள்ளிக்கு சென்று வந்தாள்.
2009 பிப்ரவரி 12ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி பழனியம்மாள் மீண்டும் திரும்பி வரவில்லை. அவளை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து பூலாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் காணாமல்போன சிறுமி அருகில் உள்ள ஓணாம்பாறை அணைக்கட்டு பகுதியில் ஒரு சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி செல்வம் (37) சிறுமி பழனியம்மாளை தன்னுடைய வீட்டுக்கு கூட்டிச்சென்று கற்பழித்து, கொலை செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவருடைய வீட்டை போலீசார் சோதனை செய்தபோது சம்பவத்தன்று சிறுமி அணிந்திருந்த வெள்ளிக்கொலுசை செல்வம் திருடி வைத்திருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பள்ளிக்கு சென்ற சிறுமி பழனியம்மாளை, செல்வம் தந்திரமாக பேசி வீட்டுக்கு கூட்டிச்சென்று கற்பழித்திருப்பதும், அதில் மயக்கமடைந்த அவளை தலையில் கம்பியால் அடித்து கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த கொலையை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக அவளுடைய உடலை ஒரு சாக்குமூட்டைக்குள் திணித்து ஓணாம்பாறை அணைக்கட்டில் வீசியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் செல்வத்தின் மீது சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரின் வாதங்கள் நடைபெற்றன. இரண்டு தரப்பு வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதி மாணிக்கம், கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறினார்.
நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளி செல்வத்துக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நீதிபதி தண்டனை விதித்தார். அதன்படி 9 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த குற்றச்சாட்டுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை செய்துவிட்டு தடயத்தை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதோடு, சிறுமி அணிந்திருந்த வெள்ளிக்கொலுசை திருடியதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மொத்த அபராத தொகையான 30 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தீர்பிபில் குறிப்பிட்டிருந்தார்.