முலாயம் விமானம் தரையிறங்கியபோது குறுக்கிட்ட சைக்கிள்- பெரும் விபத்து தவிர்ப்பு
லக்னோ: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் விமானம் தரையிறங்கிய போது, ஓடுதளத்தின் குறுக்கே கிராமவாசி ஒருவர் சைக்கிளுடன் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான ஓட்டி சமயோசிதமாக செயல்பட்டு விமானத்தை திருப்பி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், எடாவா மாவட்டத்தில் சைஃபீ கிராமத்தில் சிறிய விமானநிலையம் உள்ளது. சமாஜ்வாதி ஆட்சியில் முலாயம் முதல்வராக இருந்தபோது இது அமைக்கப்பட்டது.
இதை முலாயமும், அவரின் குடும்பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே இதை இப்போதைய மாயாவதி அரசு கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோவுக்கு தனி விமானத்தில் சென்ற முலாயம் சிங், சைஃபீயில் இறங்கிப் பார்த்து விட்டுச் செல்ல திட்டமிட்டார்.
இன்று காலை அவரின் விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென எதிரே ஒருவர் சைக்கிளில் அவசர அவசரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த விமான ஓட்டி சமயோசிதமாக செயல்பட்டு, விபத்து ஏற்படாமல் விமானத்தை இயக்கி நிறுத்தினார்.
இதையறிந்த முலாயம், விமானத்தில் இருந்து கடுப்புடன் வெளியே வந்தவர், 'கடவுள் தான் என்னை காப்பாற்றினார். கடவுளுக்கு நன்றி' எனக் கூறிவிட்டு,
'இது முழுக்க முழுக்க பாதுகாப்பு விதிமீறல். இந்த விதி மீறலுக்கு மாயாவதி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏரோடிராமில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதற்கு மாயாவதி அரசு பதில் சொல்லியாக வேண்டும்' என்றார்.