காப்பகத்துக்கு சிறுவர்கள் 'சப்ளை' - மணிப்பூர் போதகர் கைது
களியாக்கவிளை: காப்பகத்த்தில் சிறுவர்களை சட்டவிரோதமாக சேர்த்து வந்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் களியாக்கவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வநதார். இதில் மணிப்பூர், அசாம் மாநிலங்களை சேர்ந்த 76 சிறுவர்கள் சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டிருநதனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் அளித்த புகாரின் பேரில் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் காப்பகத்தில் சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டிருந்த 76 பேரையும் மீட்டனர்.
போதகர் ஷாஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரளாவுக்கு தப்பி சென்ற அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மணிப்பூரை சேர்ந்த பால் என்ற போதகர் அங்கு காப்பகம் நடத்தி வருவதாகவும், அங்கிருந்துதான் 76 குழந்தைகளை அழைத்து வந்ததாக கூறினார்.
இதையடுத்து போதகர் பாலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போதகர் பால் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று பாலை கைது செய்தனர். நேற்று காலை களியாக்கவிளை கொண்டு வரப்பட்டு அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.