போரினால் வாழ்க்கையை தொலைத்த தமிழர்கள் - சிஎன்என் கண்ணீர் செய்தி
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு நடந்த போரின் போது லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கை, கால்களை இழந்தும் கொடூரமான காயங்கள் பட்டும் அவதிப்பட்டனர்.
போரின்போது தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் போரின்போது சண்டைக்கு நடுவில் சிக்கி கை, கால், மற்றும் உடல் உறுப்புகளை இழந்தவர்கள்.
அவர்களுக்கு அரசு தரப்பில் உதவி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உடல் உறுப்புகளை இழந்து விட்ட நிலையில் வாழ்க்கையே முடிந்துவிட்ட விரக்தியுடன் அவர்கள் இருந்து வருகின்றனர்.
அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து செய்தி ஒளிபரப்பியுள்ளது. கை, கால்களை இழந்த மக்கள் இப்போது வாழ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட ரவீந்திரன் (21) என்பவர் அளித்த பேட்டியில்,
'போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் உயிர் பிழைப்பதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு பதுங்கு குழியாக சென்று மறைந்து வாழ்ந்தோம்.
இறுதி கட்ட போரின்போது அதிக அளவில் குண்டு வீச்சு நடந்தது. நான் ஓடிப் போய் ஒரு பதுங்கு குழிக்குள் நுழைந்தேன். அதன் மீதே ஒரு குண்டு வந்து விழுந்தது.
இதில் என் உறவினர் உயிர் இழந்தார். எனது 2 கால்களும் துண்டாகி விட்டன. ஒரு கண்ணையும் இழந்தேன். இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறேன். கால்களும், கண்ணும் இல்லாத நான் எப்படி வாழப் போகிறேன் என்பதே தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்துபோய் விட்டது' என்று கூறியுள்ளார்.
இவர் ஒரு உதாரணம் தான். இவரைப் போல லட்சக்கணக்கான தமிழ் மக்கள், வாழ்க்கையை தொலைத்துவிட்டு உயிரை மட்டும் சுமந்துகொண்டு வெற்றுடலாக கிடக்கிறார்கள் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.