மகளிர் இட ஒதுக்கீடு அளவு குறையலாம்-சரத் பவார் கூறுகிறார்
இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவோரை சமாதானப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
புனே, கர்லா பகுதியில் கட்சித் தொண்டர்களிடையே அவர் பேசுகையில், தற்போதைய சட்ட மசோதாவில் திருத்தம் வர வாய்ப்புள்ளது. அதை மறுக்க முடியாது. அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்தை எட்ட இது செய்யப்படலாம். அதாவது 33 சதவீதம் என்பது குறைக்கப்படலாம் என்றார் பவார்.
இருப்பினும் இந்த மாற்றத்திற்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களை சமாதானப்படுத்த பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் இடம் பெற்றுள்ள முக்கியத் தலைவர்களில் பவாரும் ஒருவர். எனவே அவர் மகளிர் இட ஒதுக்கீட்டு அளவில் மாற்றம் வரலாம் எனறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பவார் தொடர்நது கூறுகையில், லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் தடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்துள்ளேன்.
ஆனால் சரத்பவார் கட்சியின் முக்கியத் தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான சகன் பூஜ்பால், இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தனி இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிககை விடுத்துள்ளதால் பவாருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.