அதிகரிக்கும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!
கடந்த ஆண்டு 33.85 லட்சமாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 39.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
"இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் ஏர் ட்ராபிக் அளவு ஆரோக்கியமான அளவு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இந்த அளவு இன்னும் கூட உயரலாம். இனி குறைந்த கட்டண சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது" என்கிறார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் மையத்தின் இந்திய பிரிவு தலைவர் கபில் கௌல்.
இப்போதும் ஜெட் குழுமம்தான் உள்நாட்டு சேவையில் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு விமான சேவையில் ஜெட் லைட் 26.1 சதவீதமும் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் 22.7 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
இதற்கு அடுத்துதான் இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா வருகிறது. அதன் பங்கு 17.2 சதவீதம்!
'ஏர் இந்தியா நிறுவனம்தான் நியாயமாக இந்தத் துறையில் முதலிடம் வகித்திருக்க வேண்டும். இத்தனைக்கும் ஏர் இந்தியாவின் குறைந்த கட்டண சேவையும் நடைமுறையில் உள்ளது. ஆனால் மோசமான சேவை, பொருத்தமான நேரத்தில் குறைந்த கட்டண விமானங்களை இயக்காமல் விட்டது, புதிய விமானங்களை வாங்குவதில் தாமதம் போன்றவை ஏர் இந்தியா மீதான மக்களின் அபிமானத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இப்போதாவது விழ்த்துக் கொண்டு குறைந்த கட்டண சேவைகளை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும் ஏர் இந்தியா', என்கிறார் விமான சேவை அதிகாரி ஒருவர்.
இதற்கிடையே பல்வேறு விமான நிறுவனங்கள் இடையில் சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்த குறைந்த கட்டண சர்வீஸ்கள் பற்றிய விளம்பரங்களை மீண்டும் வெளியிட ஆரம்பித்துள்ளன. அதிரடி கட்டணக் குறைப்பு பற்றிய அறிவிப்புகளும் வரத் துவங்கியுள்ளன.
ஆனால், விமான எரிபொருள் விலையை நேற்றிரவு முதல் மத்திய அரசு உயர்த்திவிட்டதால் இந்த கட்டணக் குறைப்புகள் வாபஸாகலாம்.