அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளிவைப்பு
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு 2 வாரத்துக்குத் தள்ளிவைப்பு.
மதுரையில் அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சிபிஎம் கட்சியின் மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் மரணமடைந்து விட்டார்.
இதையடுத்து சிபிஎம் கட்சியைச் சேர்ந்த லாசர் வழக்கை தானே நடத்துவதாக கூறி மனு செய்தார். இதை எதிர்த்து அழகிரி பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி வி.தனபாலன் 2 வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கும் 2 வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இதில் விசேஷம் என்னவென்றால் ரித்தீஷ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சத்தியமூர்த்தி. சமீபத்தில்தான் அவர் திமுகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.