துப்பு துலங்காத அசோக் நகர் கொலைகள் - தீவிரமாக செயல்படும் போலீஸ்
சென்னை: சென்னை அசோக் நகரில் நடந்த 3 கொலைச் சம்பவங்களில் துப்பு துலக்க போலீஸார் மிகக் கடுமையாக போராடி வருகின்றனர்.
அசோக் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (74). கனிம வள நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கஸ்தூரி (70). இவர்களது வீட்டு வேலைக்காரப் பெண் அன்பரசி (17).
3 பேரும் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த சொத்து ஆவணங்களும் திருடப்பட்டிருந்தது.
இதுபற்றி அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் கனிம வள அதிகாரி கொலையில் முறையான விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டு பிடிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 வாரத்திற்குள் போலீசார் கொலையாளிகளை கண்டறிய வேண்டும். இல்லையென்றால் கனிமவள அதிகாரி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிடப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து தற்போது போலீஸார் இந்த வழக்கை படு தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை ஆணையர் செண்பகவேல் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.
கொலையுண்ட அதிகாரி சரவணனின் நெருங்கிய தோழி வரலட்சுமி, அவரது காதலன் பாண்டியனிடம் ஒரு தனிப்படையும், அசோக்நகர் ரவுடி தினகரனிடம் இன்னொரு தனிப்படையும் விசாரிக்கவுள்ளன.
சரவணனின் கார் டிரைவர் ரவி கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாக உள்ளார். அவரைக் கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர் ஒருவருக்கு இந்தக் கொலைகளில் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகப்படுகிறது போலீஸ். எனவே அவரையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.