பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்து - 8 வயது மாணவி பலி
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பள்ளி வேன் விபத்துக்கு உள்ளாகி 8 வயது மாணவி பலியானார். 39 குழந்தைகள் காயமடைந்தனர்.
பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியில் இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்காக 40 குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது பள்ளி வேன் சாலையில் திடீரென நிலை தடுமாறி கவிழந்தது.
இந்த விபத்தில், வேனில் இருந்த 40 குழந்தைகள் காயமடைந்தனர். பிரியங்கா என்ற 8 வயது குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா உயிரிழந்தார்.
பைக்கில் சென்ற 3 மாணவர்கள் பலி:
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை மோட்டார் பைக்கில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழைய காயல் அம்புரோஸ்நகரை சேர்ந்தவர் சிலுவை. இவரது மகன் ராகுல் (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
ராகுலுடன் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் மகன் நிஷாந்த், விஜய் ஆகிய 3 பேரும் இன்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் புறப்பட்டனர்.
ஆத்தூரை அடுத்த முக்காணி சேம்பர் அருகே சென்ற போது அந்த வழியே நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு தனியார் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் ராகுல் உள்ளிட்ட 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.