ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அரசன் என்ற அருமைக்கொடி(26). இவரது நண்பர் சுந்தரராஜபுரம் பாலுமகேந்திரா(22).
இவர்கள் இருவரும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அழிசோடை புளுகாண்டி கோயில் பகுதி அருகில் உள்ள இடத்தில் மான்களை வேட்டையாடி உள்ளனர்.
பின்பு, மான் கறியை பலருக்கும் விற்பனை செய்ய தங்களது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, தென்காசி ரோட்டில் ரமேஷ் எஸ்ஐ தலைமையிலான போலீசார், அவர்களை மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவர்களிடம் ஒரு கிலோ மான் கறியும், இரண்டு கிலோ கொழுப்பும், ரூ.1,000 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்பு, இருவரையும் ராஜபாளையம் வன அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வன அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மான் தோல், கத்தி, அரிவாள் போன்றவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், வேட்டையாடுதல், கறியை விற்பனை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் இருவர் மீதும் வனத்தறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.