பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
இதன் மூலம் மேல் சபையை சட்டப்படியான சபையாக மாற்றப் போகிறது இங்கிலாந்து அரசு. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை போல இது வடிவமைக்கப்படுமாம்.
இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் லார்ட் ஆண்ட்ரூ அடோனிஸ் கூறுகையில், காலம் மாறி விட்டது. பிரபுக்கள் சபையை சட்டப்பூர்வமான, மக்கள் சபையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஒரு நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களைக் கொண்ட சபையாக நீடிப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.
வருகிற மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில், புதிய மேல் சபை தொடர்பான திட்டங்கள் விரிவாக தரப்படும். பிற ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் போலத்தான் இதுவும்.
பிரபுக்கள் சபை ஒழிக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரு சபைகள் இருக்கும். இரண்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றார்.
தற்போதைய பிரபுக்கள் சபையில் 704 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 300 ஆக குறைக்கப்படவுள்ளதாம். இந்த 300 பேருமே மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேல்சபை உறுப்பினர்களாவார்கள்.
இந்தப் புதிய சபை பிரபுக்கள் சபை என்று அழைக்கப்பட மாட்டாது. அதை விட முக்கியமாக திறமையற்ற, செயலற்ற உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து திரும்பப் பெறும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய மேல் சபையின் உறுப்பினர்களாக அதிகபட்சம் 15 ஆணடுகள் வரை பணியாற்றலாம். மேலும் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மேல் சபை உறுப்பினர்களுக்கு வருடாந்திர சம்பளமாக 65,000 ஸ்டெர்லிங் பவுண்டு வழங்கப்படும். புதிய சபையின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இங்கிலாந்து குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்க வேண்டும். இங்கிலாந்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும்.
தற்போதைய லார்ட்ஸ் சபை, இங்கிலாந்து மக்களால் ஜனநாயக விரோத சபையாகவே பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசின் சட்டங்களை பரிசீலிக்கும், திருத்தும் அதிகாரம் இந்த பிரபுக்கள் சபைக்கு இருப்பது நினைவு கூறத்தக்கது.
பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளால் நியமிக்கப்படுவர்கள்தான் தற்போது இந்த பிரபுக்கள் சபையை அலங்கரித்து வருகின்றனர். தற்போது இந்த சபையில் மொத்தம் 740 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 92 பேர் பரம்பரை பரம்பரையாக இருந்து வருபவர்கள் ஆவர். 26 பேர் சர்ச் ஆப் இங்கிலாந்து சபையின் மூலமாக நியமிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் ஆயுட்கால உறுப்பினர்கள் ஆவர்.