காங் கோஷ்டி மோதல் - ஜிகேவாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறை
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஒட்டி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சென்னையில் ஜி.கே.வாசன் ஆதரவாளரின் அலுவலகம் இன்று சூறையாடப்பட்டது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் தேசிய அளவில் நடந்து வருகின்றன. வட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் நடந்து முடிந்தன.
தமிழகத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்பு ரீதியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்காக தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
முன்னதாக இந்த தேர்தலின் போது குமரி மாவட்டம் உள்பட சில பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் 2வது கட்ட தேர்தல் இளைஞர் காங்கிரஸ் சட்ட மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெறவுள்ளது.
வரும் 19ம் தேதி இத்தேர்தல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் 10ம் தேதி மாநில அளவிலான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக ஜி.கே.வாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் கதிரவன் அலுவலகம் இன்று அதிகாலை 3 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தை தாக்கி விட்டு தப்பிவிட்டதாக, அமைந்தகரை காவல்நிலையத்தில் கதிரவன் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்தியது மாநில தலைவர் தங்கபாலு கோஷ்டியினர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன்னை மிரட்டும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கதிரவன் தெரிவித்திருக்கிறார்.