பேய் விரட்டும் நிகழ்ச்சியில் விபரீதம்- சாமியார் கொடுத்த மது அருந்திய 2 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பேய் ஓட்டுவதற்காக படையலில் வைத்திருந்த ரம்மை குடித்த மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கூலிதொழிலாளி முனியசாமி மனைவி லதா. இவர் சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்தார். பல்வேறு மருத்துமனைகளில் சிகிக்சை பெற்றும் குணமாகவில்லை.
அக்கம் பக்கத்திலுள்ள சிலர் ஏதாவது பேய் பிடித்திருக்கும், அதனால்தான் நோய் குணமாகாமல் உள்ளது என்று கூறினர்.
இதையடுத்து முனியசாமி மனைவியை பிடித்துள்ள பேயை விரட்ட மந்திரவாதியை ஏற்பாடு செய்வதற்காக பலரிடம் விசாரித்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் பிச்சையா என்பவர் மந்திரீகம், பேய் ஓட்டுவதில் கை தேர்ந்தவர் என்று சிலர் கூறவே அவரை வீட்டுக்கு அழைத்தார்.
லதாவின் கை நாடியை சோதித்த மந்திரவாதி பிச்சையா, உறவினர் ஒருவரின் ஆவி லதாவின் உடலில் புகுந்துள்ளதாகவும், அந்த ஆவியை விரட்ட அவர் உயிருடன் இருக்கும்போது விரும்பி சாப்பிட்ட மற்றும் பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி லதாவின் உடலில் புகுந்துள்ள ஆவி உயிருடன் இருக்கும்போது மது குறிப்பாக ரம் விரும்பி குடித்ததாக முனியசாமி தெரிவிக்கவே பூஜையில் ரம் கண்டிப்பாக வைக்க வேண்டும் என மந்திரவாதி பிச்சையா கூறிவிட்டார். மாந்திரிக பூஜையில் வைக்க ரம்மை அதே பகுதியை சேர்ந்த தாவாளை என்பவர் வாங்கி வந்தார்.
இதற்கிடையே படையிலில் இருந்த ரம்மை அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்ற மூதாட்டியும், தூத்துக்குடி சங்குளி காலனியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளி கந்தசாமி, மற்றும் துரை ஆகியோர் குடித்தனர்.
சுமார் 30 நிமிடத்தில் முனியம்மாள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மயங்கி விழுந்த கந்தசாமியும், துரையும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கந்தசாமி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் துரை சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இறந்த முனியம்மாளின் தங்கை மகன் ஆவார்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி செந்தில் குமார், ஏஎஸ்பி அனில்குமார் கிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். ரம்மை கைப்பற்றி பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர்.
பேய் ஓட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரம்பில் விஷம் கலக்கப்பட்டதா, அல்லது அது போலி ரம்மா, அல்லது 'பேய் சேட்டையா', என்பது பரிசோதனை முடிவில் தெரியவரும்.
இதற்கிடையே மந்திரவாதி பிச்சையாவும், தாவாளையும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.