மாயாவதி-தொடரும் பண மாலைகள்!
இதையடுத்து இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
கிளப்பியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு தினம் நேற்று முன் தினம் லக்னோவில் மகா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகா பேரணியும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரமாண்டமான ரூபாய் நோட்டு மாலை ஒன்றை பகுஜன் கட்சியினர் மாயாவுக்கு அணிவித்தனர். ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மடித்தும், மடக்கியும், சுருட்டியும் வைத்து மாலையாக கோர்த்திருந்தனர்.
கிட்டத்தட்ட ரூ. 5 கோடி அளவிலான ரூபாய் நோட்டுக்கள் இதில் இடம் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், அதில் ரூ 22.5 கோடி இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததால் அவைகள் ஒத்தி வைக்கப்படும் நிலை உருவானது.
இந் நிலையில் இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொண்டர்கள் அளித்த பணம் என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது. மேலும் அந்த மாலையில் இருந்தது வெறும் ரூ. 21 லட்சம் தான் என்றும் அந்தக் கட்சி கூறுகிறது. அந்தப் பணத்தை வங்கியி்ல் செலுத்திவிட்டதாகவும் பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது.
இது மாயாவதியின் பணம் என்றும், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே இந்த மாலை போடப்பட்டதாகவும் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
மாலை மறைப்பு:
இந் நிலையில் வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்து லக்னொவில் போடப்பட்ட பண மாலையை மாயாவதி மறைத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தேனீக்கள் தாக்குதல்:
இதற்கிடையே பேரணியின் முடிவில் பொதுக் கூட்டம் நடந்தபோது ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டத்தினரை தாக்கின. சமாஜ்வாடிக் கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் தான் தேன் கூட்டைக் கொண்டு வந்து மேடை அருகே வைத்து கலைத்துவிட்டு சதி செய்ததாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டிஐஜி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இன்னொரு கரன்சி மாலை:
இந் நிலையில் இந்த விவகாரத்தை சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்த தனது கட்சியின் எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தை மாயாவதி அவசரமாகக் கூட்டினார்.
இக் கூட்டத்திலும் மாயாவதிக்கு ஒரு கரன்சி மாலை அணிவிக்கப்பட்டது. இதில் ரூ. 18 லட்சம் மதிப்பு கரன்சிகள் இருந்தன.
இனிமேல் மாயாவதி எங்கு போனாலும் நோட்டு மாலைகள் தான் அணிவிக்கப்படும் என உத்தரப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் நசீமுதீன் சித்திக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இப்போது போட்டுள்ள 2வது பண மாலை எங்களது எதிரிகளுக்கு நாங்கள் கொடுத்துள்ள பதிலடி. இந்த மாலையின் மதிப்பு ரூ. 18 லட்சமாகும். 18 கட்சி கிளைகளிலிருந்து திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு, 100 ரூபாய், 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் இதை உருவாக்கினோம் என்றார்.