வரி ஏய்ப்பா?- இன்போஸிஸ் மறுப்பு!
இந்த நிதியாண்டில் மட்டும் ரூ1,180 கோடியை வரியாக செலுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சண்டீகரில் இன்போஸிஸ் அமைத்துவரும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரால் வரி ஏய்ப்பு செய்யப்படாதகக் கூறப்படுகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டல விதிப்படி, இதற்கான ஆரம்ப அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு வழங்கும்போது அந்த பகுதியில் எந்த கட்டடமும் இருக்கக் கூடாது. ஆனால் இன்போஸிஸ் விவகாரத்தில், அனுமதி பெறும்போதே அந்த நிலத்தில் சில பெரிய கட்டடங்கள் எழுப்பப்பட்டிருந்தனவாம்.
இதனால் அனுமதி பெறும் முன்பே வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.
2006ம் ஆண்டு முதல் செயல்படும் இன்போஸிஸின் சண்டீகர் மையத்தில் 2,676 பணியாளர்கள் உள்ளனர். இதுவரை ரூ 750.40 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது இந்த மையத்திலிருந்து.
இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ கோபால கிருஷ்ணன் கூறுகையில், "நாட்டில் அதிகம் வரிசெலுத்தும் ஐடி நிறுவனங்களில் இன்போஸிஸ் முதலிடத்தில் உள்ளது. நாங்கள் வரி ஏய்ப்பு செய்ய எப்போதும் முயன்றதில்லை. அதுவும் வரியை முன்கூட்டியே செலுத்துவது எங்கள் பாணி" என்றார்.
சண்டீகர் சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்துக்கு இன்னும் அரசின் முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் இதற்கு சண்டீகர் நிர்வாகம் இலவசமாக நிலம் ஒதுக்கியதாகக் கூறப்படுவது தவறானது என்றும் தெரிவித்தார் கோபாலகிருஷ்ணன்.
ஆனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான ஆரம்ப அனுமதி பெற்றபோதே, அந்தப் பகுதியில் கட்டடம் எழுப்பப்பட்டிருந்தது குறித்து அவர் பதிலேதும் கூறவில்லை.