விடுதலைப் புலிகள் முன்பு தொடங்கிய கட்சி இங்கிலாந்தில் பதிவு
லண்டன்: விடுதலைப் புலிகள் முன்பு தொடங்கிய அரசியல் கட்சி அதே பெயரில், அதே விடுதலைப் புலிகள் இயக்கக் கொடியுடன் இங்கிலாந்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.
கட்சியின் தலைவராக மாத்தையா அறிவிக்கப்பட்டார். அவரது பெயரிலேயே கட்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தக் கட்சி இலங்கை தேர்தல் ஆணையத்திலும் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் அதிபர் பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 1 ம் தேதி வரை நடைபெற்றது.
1990ம் ஆண்டு ஆனி மாதம் ஆரம்பமான 2ம் கட்ட ஈழ போரைத் தொடர்ந்து இக்கட்சியின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அது செயல்படவில்லை.
இன்றளவும் இந்தக் கட்சி தொடர்ந்து இலங்கையில் ஒரு அரசியல் கட்சியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இக்கட்சி, இங்கிலாந்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
People"s Front of Liberation Tigers என்ற பெயரில் அந்தக் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறி்து என்.பாலசுப்ரமணியம் என்பவர் கூறுகையில், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் இங்கிலாந்தில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது.
தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருக்கிறோம்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்கொண்டு செல்வோம்.
புலிச் சின்னமே கட்சியின் சின்னமாக பதியப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் Unit G11, Lombard Business Park
2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற முகவரியில் விரைவில் திறக்கப்படவுள்ளது என்றார் பாலசுப்ரமணியம்.