முல்லைப் பெரியாறு நிபுணர் குழுவை எதிர்ப்பது ஏன்?: தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக குழு அமைக்க உத்தரவிட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டு, இப்போது எதிர்ப்பது ஏன் என்று தமிழக அரசின் வக்கீலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை தற்போது அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த பெஞ்ச், புதிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார். தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி மற்றும் மத்திய அரசின் சார்பில் இருவர் இருப்பார்கள் என்று அறிவித்தது.
இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தக் குழுவில் இடம் பெறத் தேவையில்லை என்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போட்டது. இதையடுத்து தமிழக அரசு இந்தக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில் உச்சநீதி்மன்றம் தனது கடமையை தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படுவதாக கூறியிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெயின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், இந்தக் குழு தேவையில்லாதது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயின், தமிழக, கேரள அரசுகளிடம் கேட்டுத்தான் குழு அமைக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் இப்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று வினவினார்.
பின்னர் இதில் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. மற்ற நீதிபதிகளுடனும் (அரசியல் சாசன பெஞ்ச்) கலந்து ஆலோசனை செய்த பின்னர்தான் விசாரிக்க முடியம் என்று அறிவித்தார்.