அதிமுக நகர்மன்ற தலைவி மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்?
கரூர்: தாந்தோணி நகராட்சியில் ஏற்பட்ட மோதலில் திமுக உறுப்பினர்கள் தன்னை தாக்கிவிட்டதாக அதிமுக நகர்மன்றத் தலைவி ரேவதி ஜெயராஜ் புகார் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சியில் கடந்த 15 ம் தேதி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு, முன்னதாக, கூடுதல் குடிநீர் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் நகர் மன்ற தலைவி ரேவதி ஜெயராஜுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தீர்மானம் பதிவு செய்யப்படும் 'மினிட்ஸ்' புத்தகம், கமிஷனர் தெய்வசிகாமணியிடம் ஒப்படைக்காமல் தலைவர் ரேவதி தானே வைத்துள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
திமுக கவுன்சிலர் ரவி தலைமையில் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அனைவரையும் விலக்கி விட்டனர். இந்நிலையில், திமுக கவுன்சிலர்கள் தன்னை தாக்கிவிட்டதாக கூறி நகர் மன்ற தலைவர் ரேவதி, மாஜி கவுன்சிலர் இளங்குமரன் ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.