மங்களூரில் ஷோட்டா ஷகீலின் 11 கூட்டாளிகள் கைது
மங்களூர்: தென் கன்னட மாவட்ட போலீஸார் மங்களூரில் வைத்து தாதா ஷோட்டா ஷகீலின் 11 கூட்டாளிகளை வளைத்துப் பிடித்துள்ளனர். இவர்களுக்கும், ரவி பூஜாரி என்ற உள்ளூர் தாதாவுக்கும் இடையே நடக்கவிருந்த பயங்கர மோதலையும் போலீஸார் தடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்தும் நிழலுக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிதான் ஷகீல் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் - சிக்மகளூர் மஞ்சுநாத் என்கிற மஞ்சு (22), அசோக் நகர் சுஷில்குமார் என்கிற மோனு (24), குத்ரோலியைச் சேர்ந்த லதீஷ் நாயக் என்கிற லட்சே (21), அஸ்வின் அன்சான் (25), கொத்தரா கிராஸ் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அல்பன் டிசவுசா (38), பவந்தி நகர் லோஹித் கத்தி (21), ஊர்வா ஸ்டோர் பிரவீன் (30) மற்றும் சுஷன்சந்திரா (22), மும்பையைச் சேர்ந்த கேப்டனியோ கணேஷ் சிவராம ஷெட்டி (35), உ.பியைச் சேர்ந்த ராகேஷ் மிஸ்ரா, இன்னொரு மஞ்சு.
ஹரீஷ் ஷெட்டி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவர் நேபாளுக்கு ஓடி விட்டதாக தெரிகிறது.
பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர் ஹரீஷ் ஷெட்டி. 1998ல் நடந்த குரூப் சகோதரர்கள் படுகொலை தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் வெளியில் வந்து தலைமறைவானவர் இந்த ஷெட்டி.
ரவி பூஜாரி கோஷ்டிக்கும், இந்த 11 பேருக்கும் இடையே பெரும் மோதல் நடைபெறப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து அனைவரையும் வளைத்துப் பிடித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் திட்டத்திற்காக சோட்டா ஷகீல் இந்தக் கும்பலுக்கு ரூ. 2லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். வெஸ்டர்ன் யூனியன் வங்கி மனி டிரான்ஸ்பர் மூலம் பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.