கூவம் ஆறு சீரமைப்பு- சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னையில் மட்டும் சுமார் 18 கிமீ தூரம் ஓடும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நீர் நிலையாக்க தமிழக அரசு திட்டமிட்டது.
கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் தூர்வார்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக கடந்த 2008ம் ஆண்டில் ஆயிரத்து 260 கோடி தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.
கூவத்தை நவீன முறையில் சீரமைப்பது தொடர்பான விவரங்களை சேகரிக்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கடந்த 2009ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று வந்தார்கள்.
சிங்கப்பூரில் கல்லாங் என்ற ஆறு சீரமைக்கப்பட்ட விதம் குறித்து நேரில் அறித்து பல்வேறு விவரங்களை சேகரித்து முதல்வர் கருணாநிதியிடம் ஆறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்க சென்னை நதிகள் ஆணையம் அமைத்த தமிழக அரசு, சீரமைப்பு பணிகளில் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற சிங்கப்பூர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தது.
சிங்கப்பூர் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தும் மேற்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா தலைமையில் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைகளுக்கு இடையே சென்னை நிதிகள் சீரமைப்பு பணிகளுக்கான ஆலோசனை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதில், சிங்கப்பூர் கூட்டுறவு தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சா சியா மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னை நதிகள் சீரமைப்பு குறித்து முழுமை திட்டம் தயாரித்தல், திட்ட மேலாண்மை மற்றும் செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் திறனை மேம்படுத்துதல், சீரமைப்புப் பணிகள் போன்றவற்றில் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் ஆலோசனைகளை வழங்கும்.
முதல்கட்டமாக கூவம் நதி சீரமைப்பு தொடர்பாக அக்குழுவினர் தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். கூவம் நதியின் பல்வேறு இடங்களையும் நேரில் பார்வையிட உள்ளனர்.