டிவி சீரியல் கதாசிரியருக்கு கத்திக் குத்து!
சாலையி்ல் மனைவியோடு நடந்து சென்று கொண்டிருந்த டிவி சீரியல் கதை வசனகர்த்தா வடிவேல் முருகனை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் வடிவேல் முருகன் (38 டி.வி. தொடர்களுக்கு கதை-வசனம் எழுதி வருகிறார்.
நேற்றிரவு இவர் தனது மனைவி நிர்மலாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மனைவி நிர்மலாவின் தோளில் கைபோட்டபடி வடிவேல் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
கே.கே.நகர் அழகிரி சாலை சந்திப்பில் அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென இவர்கள் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
"நடுரோட்டில் ஒரு பெண்ணின் தோளில் கை போட்டபடி எப்படி நடந்து செல்லலாம்... மனைவியாகவே இருந்தாலும் நடு ரோட்டிலா இதையெல்லாம் செய்வது?" என கேட்டு, வடிவேல் முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் அந்த இளைஞர், வடிவேல் முருகனின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
பக்கத்திலிருந்த நிர்மலா அலறினார். வடிவேல் முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த இளைஞரை தேடி வருகிறார்கள்.