4 மாவட்டங்களில் பெண்களை கல்வியறிவுள்ளவர்களாக மாற்றும் 'படிக்கும் பாரதம்' திட்டம்!
சென்னை: மத்திய அரசின் படிக்கும் பாரதம் திட்டம் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.
இன்று அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது...
பெண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில், படிக்கும் பாரதம் என்னும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிதியுதவி மற்றும் மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன், தமிழகத்தில் விழுப்புரம், பெரம்பலூர், சேலம், மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ரூபாய் 68 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
விழுப்புரத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
கடந்த ஆண்டுகளில் அரசுக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளைப் பயிலும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
வரும் ஆண்டில், அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 4 அரசு கலை மற்றும் 7 தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
மதுரை மாவட்டம் மேலூரில் புதிய பாலிடெக்னிக் ஒன்று தொடங்கப்படும்.
விழுப்புரத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.
மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், அவர்களுக்கு ரூ. 10 கோடியில் இலவச ஆங்கில டிக்ஷனரி வழங்கப்படும்
ரூ. 68 கோடியில், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் படிக்கும் பாரதம் திட்டம் மத்திய அரசின் உதவியோடு அமல்படுத்தப்படும்.
கல்வியில் கணினியின் பங்கை நன்குணர்ந்துள்ள இந்த அரசு 1,980 அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கும், 2, 131 உயர் நிலைப்பள்ளிகளுக்கும் கணினிகளை வழங்கியுள்ளது.
நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கும் திட்டம் 2008-2009 -ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு, இதுவரை 4,700 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 2 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்க, வரும் நிதியாண்டில் ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே 2010-2011-ம் நிதியாண்டு இறுதியில், அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் கணினிக் கல்வி வழங்கும் வசதி
பெற்றிருக்கும் பெருமையைத் தமிழகம் பெறும்.
நபார்டு நிதியுதவியுடன் ரூபாய் 767 கோடி மதிப்பீட்டில் 850 அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் பயனடையும் வகையில், கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 5000 பள்ளிகளில் ரூ. 85 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள 125 உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
அதேபோல, 200 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் .
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் வாரம் 3 முட்டைகள் வழங்க திட்டம். இதற்காக ரூ. 178 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய இடைநிலை கல்வி மேம்பாட்டுத் திட்டத்திலும் 25 விழுக்காடு செலவைத் தமிழக அரசு ஏற்கிறது. அதற்காகத் தமிழக அரசின் பங்காக ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய உயர் நிலைப்பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என்றார் அன்பழகன்.