தகுதியில்லாதவர்களுக்கு பதவி உயர்வு-மின்வாரியம் மீது வழக்கு
நாமக்கல்: தமிழ்நாடு மின் வாரியத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த குருசாமி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தோம். 2005ம் ஆண்டு உதவியாளராக பதவி உயர்வு பெற்றோம்.
அதன் பின்பு அஞ்சல் வழியில் பி.காம் பட்டம் படித்தோம். எங்களைப் போன்ற கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு அக்கவுன்ட் மேற்பார்வையாளர் பதவி வழங்காமல் உரிய கல்வித் தகுதி இல்லாத 350 பேருக்கு அந்தப் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
கல்வித்தகுதி உள்ளவர்களுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு இது போன்ற ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே, மின்துறையின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இம்மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.