பென்னாகரம்-'தங்க நாணயம்' தர தயாராகும் கட்சி!
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளிக்கலாமா என்று ஒரு கட்சி தீவிர ஆலோசனையில் உள்ளதாம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர, முக்கிய கட்சி ஒன்று, வேட்டி, சேலை, பேன்ட், சர்ட் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதல் கட்டமாக பட்டுவாடா செய்திருப்பதாக மற்ற க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் இது வாக்காளர்களிடம் எடுபடவில்லை. அவர்களிடம் ஓட்டுக் கேட்டு போகும் கட்சிக்காரர்களிடம் என்ன தருவீர்கள் என்றுதான் மக்கள் கேட்கிறார்களாம்.
இதனால் குற்றச்சாட்டு சொன்ன கட்சிகளும் இப்போது தத்தமது சக்திக்கேற்ப பணத்தைத் திணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மிகவும் பீதியில் உள்ள ஒரு கட்சியோ எதையாவது கொடுத்தால்தான் கதைக்கு ஆகும் என்ற முடிவுக்கே வந்துவிட்டது.
என்ன கொடுக்கலாம் என்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்போன் கொடுக்கலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டதாம். ஆனால் தொகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறையினர் அமைத்து வைத்துள்ள செக் போஸ்ட்களைத் தாண்டி செல்போன்களைக் கொண்டு செல்வது நடக்காத காரியம் என்று அது கைவிடப்பட்டது.
இந் நிலையில் புதிய யோசனை ஒன்றை அவர்கள் இறுதி செய்துள்ளனராம். அதாவது பெண்களைக் கவரும் வகையில் அவர்களுக்கு தங்க நாணயம் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
ஒரு லட்சம் பேருக்கு ஒரு கிராமில் தங்க நாயணம் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாம் அந்தக் கட்சி.