அகதி பெண் பாலியல் பலாத்கார விவகாரம்-உண்மை கண்டறியும் குழு விசாரணை!
கரூர்: கரூர் அருகே இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை போலீசார் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கணடறியும் குழு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 17.05.2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.
இந்த வழக்கில் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார், பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில், கடந்த மார்ச் 7ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் விட்டனர்.
ஆனால், அன்று மாலையே பத்மாதேவி தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந் நிலையில், பத்மாதேவியை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் அவர் தீக்குளித்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை இலங்கை அகதி முகாமில் விசாரனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.