பள்ளிகளில் அதிக 'கலோரி' குளிர்பான விற்பனையை நிறுத்தும் பெப்ஸி- கோக்!
2012 முதல் இந்த சுய தடையை அமல்படுத்தப் போவதாக பெப்ஸிகோ நிறுவன சிஇஓ இந்திரா நூயி அறிவித்துள்ளார். 2013 முதல் இந்தத் தடையை தாங்களும் பின்பற்றப் போவதாக கோக கோலா அறிவித்துள்ளது.
பெப்ஸி தலைவர் மற்றும் சிஇஓ இந்திரா நூயி இதுபற்றிக் கூறுகையில், "மாணவர்களின் உடல் நலனில் பெப்ஸிக்கு அதிக அக்கறையுண்டு. அதிக கலோரி மற்றும் சர்க்கரைச் சத்து கொண்ட குளிர்பானங்களை மாணவர்களுக்கு விற்பதில்லை என பெப்ஸி முடிவெடுத்துள்ளது. வருகிற 2012 முதல் இந்த தடையை எங்களுக்கு நாங்களே விதித்துக் கொள்கிறோம். பள்ளி வளாகங்களில் உள்ள கடைகளில் கட்டாயம் இந்த அதிக கலோரி பானங்கள் விற்கப்படாது.
குறைந்த கலோரி கொண்ட பானங்களை இனி அதிக அளவு தயாரிக்க உள்ளோம். இந்த வகைப் பானங்களுக்கு அனைத்துத் தரப்பும் ஆதரவு அளிக்க வேண்டும்..." என்றார்.
கோக கோலா நிறுவனம் 2013 முதல் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள் எதையும் பள்ளி வளாகங்களில் விற்பனைக்குத் தருவதில்லை என முடிவு செய்துள்ளது. இது தொடர்பான உத்தரவை தங்களின் கிளை நிறுவனங்கள், ஏஜென்டுகள், விற்பனையாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாக கோக கோலா கூறியுள்ளது.