ஒரிஸ்ஸாவில் தடையை மீறிய தொகாடியா கைதாகி விடுதலை
ஒரிஸ்ஸா மாநிலத்தில் மத மோதல்களுக்குப் பேர் போன கந்தமால் மாவட்டத்தில் சமீபத்தில் பயங்கர கலவரம் நடந்தது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மதத் தலைவர்கள் யாரும் கந்தமால் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கடந்த வாரம் பாஜக தலைவர்கள் சிலர் கந்தமால் மாவட்டத்துக்குள் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.
இந் நிலையில் பிரவீன் தொகாடியா, கந்தமால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப் போவதாக அறிவித்தார்.
இதற்காக நேற்றிரவு பெளத் மாவட்டத்தில் உள்ள சாரிசெளக் என்ற இடத்திற்கு வந்து தங்கினார். நள்ளிரவில் சாரிசெளக்கில் இருந்து கந்தமால் நோக்கி சென்றார்.
இதையடு்த்து அவரை போலீசார் வழி மறித்து கைது செய்தனர். அவர் சாரிசெளவுக் நகரில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.
இந் நிலையில் இன்று காலை தொகாடியா கைது செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து கந்தமால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. பல இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு 12 மணி நேர பந்த் நடத்தவும் பஜ்ரங் தள் அழைப்பு விடுத்துள்ளது. இந் நிலையில் இன்று தொகாடியா விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய தொகாடியா, கந்தமால் ஒன்றும் வாடிகனோ அல்லது பாகிஸ்தானே அல்ல நான் நுழைய தடை விதிப்பதற்கு. இந்த மாவட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கிருஸ்துவப் பகுதியாக மாற்றிவிட்டார் என்றார்.