ரயில் நிலையத்தில் மாயமான புதுமணப் பெண்-காதலனுடன் ஓட்டம்?
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கணவருடன் வந்த புதுமணப் பெண், வாலிபருடன் மாயமானார்.
சென்னை திருவள்ளூரைச் சேர்ந்த விஜயசாரதிக்கும் (27) சைதாப்பேட்டையை சேர்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த மாதம் திருமணம் நடந்தது.
நேற்று விருந்து நிகழ்ச்சிக்காக இருவரும் மேற்கு சைதாப்பேட்டை சென்றுவிட்டு திருவள்ளூருக்குப் புறப்பட்டனர்.
அப்போது வழியில் வந்த ரமேஷ் என்ற வாலிபரை தனது சித்தப்பா மகன் என்று கணவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் பிரியா.
இதையடுத்து மூவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றனர். விஜயசாரதி டிக்கெட் எடுக்கச் சென்றார்.
திரும்பி வந்தபோது மனைவியையும் வாலிபரையும் காணவில்லை. பிரியாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ரயில் நிலையம் முழுதும் தேடி பார்த்துவிட்டு ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் விஜயசாரதி.
பிரியாவின் தந்தை போலீசில் கூறுகையில், பிரியா அணிந்திருந்த நகைக்கா அவளை ரமேஷ் கடத்தியிருக்கலாம் என்றார்.
இதையடுத்து பிரியா கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் விசாரணையில் ரமேஷ், காஞ்சீபுரத்தில் டிரைவராக வேலை பார்ப்பதும், அவர் பிரியாவின் காதலர் என்றும் தெரிய வந்துள்ளதாம்.
இருவரும் திட்டமிட்டே தலைமறைவாகி உள்ளதாக கருதும் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.