மதுரையில் 5 போலி மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல்!
மதுரை: மதுரையில் போலியான உரிமங்களுடன் முறைகேடாக இயங்கி வந்த ஐந்து மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. தண்ணீரை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்தும், புட்டிகளில் அடைத்தும் விற்கப்படுகின்றன.
இவற்றில் சில நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமலும், சுகாதார கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் குவிந்தன.
தரமற்ற தண்ணீரை பாக்கெட்டுகளிலும், புட்டிகளிலும் அடைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களிடம் இவை விற்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
இதன் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநில அளவிலான அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுரையில் போலியான உரிமத்தைப் பயன்படுத்தி முறைகேடாக மினரல் வாட்டர் தயாரித்து வந்த ஐந்து நிறுவனங்களை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எந்த வித அனுமதியும் பெறாமல், தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கும் உட்படாமல் தாங்ளாகவே ஐஎஸ்ஐ முத்திரையை வைத்துக்கொண்டு இந்த நிறுவனங்கள் தண்ணீரை தயாரித்து விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த ஐந்து நிறுவனங்களையும் அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். தமிழ்நாடு சுகாதாரத் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, தொழில்நுட்ப நிபுணர் மச்சக்காளை மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.