அரசு கல்லூரிகளில் 1027 புதிய விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்!
திருச்சி: அரசுக் கல்லூரிகளில் புதிய விரிவுரையாளர்கள் நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (தனி) பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர் இதுபற்றி கூறுகையில்,
'தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,027 விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
தமிழகத்தில் உயர் கல்விக்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 200 கோடி செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 11ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்விக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுக் கல்லூரிகளில் சுயநிதிக் கல்லூரிகளுக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் அதிநவீன நூலகம், கலையரங்கம், நவீன வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும், 2010-11ம் கல்வியாண்டில் அரசுக் கல்லூரி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள், தளவாடப் பொருள்கள் வாங்கத் தமிழக அரசு ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது' என்றார்.