எம்பி தொகுதிகளை 814 ஆக உயர்த்திய பின் மகளிருக்கு ஒதுக்கீடு தரலாம்! - பஸ்வானின் பலே யோசனை
இப்போதுள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சரியல்ல. வேண்டுமானால் எம்பிக்களின் எண்ணிக்கையை 814 ஆக உயர்த்தி அதில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற புது ரூட்டை அறிவித்துள்ளார் ராம்விலாஸ் பஸ்வான்.
இதுகுறித்து லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானிடம் நேற்று கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில்:
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் இப்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை வைத்துக் கொண்டே பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது சரிவராது. பல பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும்.
அடுத்த தடவை நமது தொகுதி பெண்கள் தொகுதியாக மாறி விடுமோ என்ற பயத்தில் எந்த எம்.பி.யும் தங்கள் தொகுதிக்கு செய்ய வேண்டிய பணிகளைக் கூட
சரியாக செய்யாமல் போகும் அபாயம் உள்ளது.
எனவே இப்போதுள்ள தொகுதி எண்ணிக்கையை உயர்த்தி அதில் இருந்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். இது முந்தைய மக்கள் தொகை அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்திய மக்கள் தொகை 120 கோடியாக உயர்ந்து விட்டது. நிர்வாக வசதிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசு, எம்பிக்கள் எண்ணிக்கையையும் உயர்த்தலாம். இதற்கு தகுந்த மாதிரி தொகுதி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதாவது 543-ல் இருந்து 814 தொகுதியாக உயர்த்த வேண்டும்.
அதில் இருந்து பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், மற்றும் நலிவடைந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..." என்றார்.