பொன்சேகா மனுவை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்!
கொழும்பு: சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதிகளுள் ஒருவர் திடீரென விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அந்த நீதிபதியின் பெயர் டி எஸ் சீ லேகம்வசம்.
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா, தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அவரது மனைவி அனோமா பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு மீதான முதல்கட்ட விசாரணை நடந்து வரும் நிலையில், தன்னால் தொடர்ந்து இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லேகம்வசம் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக நீதிபதி அணில் குணதிலக்க விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.