ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் சாவு
போர்டாபிரின்ஸ்: ஹைத்தியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலியானார்கள்.
ஹைத்தியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடும் பூகம்பம், சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டது.
வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என ஏராளமானவை இடிந்து விழுந்து மிகப் பெரிய பேரழிவை ஹைத்தி சந்தித்தது.
சர்வதேச நாடுகள் ஹைத்தி பூகம்ப நிவாரணப் பணிகளுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ஹைதி தீவில் நேற்று முன்தினம் இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. அப்போது பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பின்னர் மீண்டும் நேற்றிரவு ஹைதி தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் சில வினாடிகள் தொடர்ந்து நீடித்தது.
இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. பலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஐநா மீட்புக்குழு ஹைதியில் முகாமிட்டு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியது.
ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.