சென்னை, மதுரை போக்குவரத்து கழகங்கள் 2ஆக பிரிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 7 கழகங்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என இயங்கி வருகின்றன.
சென்னையில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தினசரி சுமார் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். மாநகர எல்லை நாளுக்கு நாள் விரிவடைவதால் பயணிகளின் எண்ணிக்கையும், பேருந்துகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
எனவே நிர்வாக நடைமுறை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னை போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள சென்னை மாநகர போக்குவரித்துக் கழகம் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களாக பிரிக்கப்படும்.
அதேபோல் மதுரை போக்குவரத்தை கழகத்தை 2 ஆகப் பிரித்து புதிதாக திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்படுகிறது.
மதுரை போக்குவரத்து கழகத்தில் தற்போது மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய டிவிஷன்கள் உள்ளன.
மதுரையில் இருந்து நாகர்கோவில் வரை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுவதால் திருநெல்வேலியை மையமாக வைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி டிவிஷன்கள் இணைந்து செயல்படும்.